
திருவொற்றியூர்:
திருவொற்றியூர், ஐயாபிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி தனலட்சுமி(வயது 45). அருகில் உள்ள வீடுகளில் வேலை செய்து வந்தார்.
இவர் காலையில் வீடுகள் முன்பு கோலம் போடுவது வழக்கம். அதே பகுதியில் தனலட்சுமியின் அக்காள் வீடு உள்ளது. அவரது வீட்டுக்கும் தனலட்சுமி கோலம்போட்டு வந்தார்.
இந்தநிலையில் இன்று காலை 5.30 மணியளவில் தனலட்சுமி வழக்கம்போல் வீட்டு வேலைகள் செய்து விட்டு அக்காள் வீட்டு முன்பு கோலம்போட்டு கொண்டு இருந்தார்.
அப்போது அங்குத் தனலட்சுமியின் அக்காள் மகளான செல்வியின் கணவர் காளிமுத்து வந்தார். ஏற்கனவே செல்விக்கும், காளிமுத்துவுக்கும் குடும்ப தகராறு இருந்து வந்ததால் தனலட்சுமி அவரைக் கண்டித்தார்.
இதனால் தனலட்சுமிக்கும், காளிமுத்துவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த காளிமுத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் தனலட்சுமியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் தனலட்சுமி சரிந்தார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தபோது தனலட்சுமி உயிருக்குப் போராடிய படி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தனலட்சுமி இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் இளங்கோவன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் நவீன் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் தனலட்சுமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தைத் துணை கமிஷனர் (பொறுப்பு) சுப்புலட்சுமி பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இதில் குடும்ப தகராறில் காளிமுத்து தனது மனைவி செல்வியை தீர்த்துக் கட்ட வந்து இருந்த நிலையில் தனலட்சுமியை கொலை செய்து இருப்பது தெரிந்தது.
திருப்பூரை சேர்ந்த காளிமுத்துவும், கொலையுண்ட தனலட்சுமியின் அக்காள் மகளான செல்வியும் பேஸ்புக் மூலம் காதலித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
காளிமுத்து திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
திருப்பூரில் இருந்தபோது செல்வி மீது காளி முத்துவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தகராறில் திருமணமான சில நாட்களிலேயே பிரிந்து திருவொற்றியூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.
எனினும் காளிமுத்து தொடர்ந்து இங்கு வந்து மனைவியுடன் மோதலில் ஈடுபட்டு வந்து உள்ளார். கடந்த 3 நாட்களாக அவர் மனைவி செல்வியை தீர்த்துக் கட்ட கத்தியுடன் அவரது வீட்டின் அருகே நோட்டமிட்டு சுற்றி வந்து உள்ளார்.
இந்த நிலையில் இன்று காலைச் செல்வியுடன் மோதலில் ஈடுபட காளிமுத்து வந்தபோது அங்கு வீட்டு வாசலில் கோலமிட்ட தனலட்சுமி அவரைத் தடுத்து “இங்கே நீ ஏன் வருகிறாய்” என்று கூறி கண்டித்து உள்ளார்.
இதனால் கோபம் அடைந்த காளிமுத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் தனலட்சுமியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டுத் தப்பி சென்று இருப்பது தெரியவந்தது.
தலைமறைவான கொலையாளி காளி முத்துவை போலீசார் தேடிவருகிறார்கள். மேலும் இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
வீட்டு வாசலில் கோலமிட்ட பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
