
வீரப் பாலகர்கள் நாளையொட்டிப் பல்வேறு குருத்துவாராக்களில் அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் வழிபாடு மேற்கொண்டனர்.
குரு கோவிந்த் சிங் இஸ்லாமிய மதத்துக்கு மாற மறுத்துவிட்டதால் அவர் மகன்களை முகலாயர்கள் கொன்றனர்.
இந்தத் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் வீரப் பாலகர்கள் நாள் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி மும்பையில் உள்ள குருத்துவாராவில் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வழிபாடு செய்தார்.
மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் போபாலில் உள்ள குருத்துவாராவுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார்.
பத்தேகர் சாகிப்பில் பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான் குடும்பத்துடன் சென்று வழிபாடு செய்தார்.
ஜெய்ப்பூரில் சீக்கியர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா கலந்துகொண்டார்.
உத்தரக்கண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நைனிடாலில் உள்ள குருத்துவாராவில் வழிபாடு செய்தார்.
வீரப் பாலகர்கள் நாள் மற்றும் குரு தேஜ்பகதூரின் நினைவுநாளையொட்டி லக்னோவில் உள்ள குருத்துவாராவில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வழிபாடு செய்தார்.
பாஜக தேசியச் செயல் தலைவர் நிதின் நவீன், தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, தில்லி அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா ஆகியோர் குருத்துவாரா பங்களாசாகிப்பில் வழிபாடு செய்தனர்.

