
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் சாலையை மறித்து திடீர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடுரோட்டில் வாகனங்களை நிறுத்திவிட்டு, விசிக தொண்டர்கள் உற்சாகமாகக் குத்தாட்டம் போட்டதுடன், அந்தத் தருணங்களை வீடியோவாகப் பதிவு செய்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களாகவும் பதிவேற்றியுள்ளனர்.
தொண்டர்களின் இந்தச் செயலால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுங்கச்சாவடிப் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால், பொதுமக்களும், வெளியூர் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.
தேசிய நெடுஞ்சாலையில் இதுபோன்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட தொண்டர்களின் செயல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.





