
ஒரு தேர்தல்ல தோற்கறது சகஜம் ஆனால் ஏன் தோத்தோம்ணு ஆராயுறது ரொம்ப முக்கியம். அப்படி திமுக தேர்தல் தோல்விக்குப் பிறகு அதற்கான காரணங்களை அறிவதற்காக சில குழுவை அமைத்தார் ஸ்டாலின். தமிழகம் முழுவதும் ஆய்வு செய்த குழுவினர், தங்களின் ரிப்போர்டை ஸ்டாலினிடம் தாக்கல் செய்திருந்தனர்.
ஆனால், ரிப்போர்ட்டில் பரிந்துரைத்தபடி, எந்த ஒரு சீர்த்திருத்த நடவடிக்கையை கட்சி தலைமை எடுக்கவில்லை. குறிப்பாக, 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்கிற சீர்திருத்தத்தை கூட ஸ்டாலின் எடுக்க முன்வரவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் திமுக தரப்பில் ஆஃப் தி ரெக்கார்டாக சொல்லப்பட்டன. இதனால், இந்த விவகாரம் நீருபூத்த நெருப்பாகவே கனன்று கொண்டிருந்தன.
இந்நிலையில்தான் துரைமுருகன், டி.ஆர். பாலு, நேரு, ராசா, பொன்முடி, கனி மொழி, உதயநிதி உள்பட 16 சீனியர்களை வீட்டிற்கு அழைத்து ஆலோசித்தார் ஸ்டாலின். இந்த ஆலோசனையில் சபரீசனும் கலந்து கொண்டார். மேலும், சென்னையில் உள்ள மா. செ. க்களில் சேகர்பாபு, மா. சுப்பிரமணியன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
“மூத்தோர் சொல் முன் கசக்கும்; பின் இனிக்கும்.” ஆனால் இங்கு ஒரு மூத்தோர் மற்றொரு மூத்தோருக்கு ஆப்பு வைத்த கதையும் சற்று சூடானதுதான். அதாவது இந்த கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை ஸ்டாலின் முன்வைத்த நிலையில், முக்கிய விஷயமாக 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மா.செ. பதவி இல்லை என்பதும், 2 தொகுதிகளுக்கு ஒரு மா.செ.தான் என்பதும் பேசினார் ஸ்டாலின்.
அதுமட்டுமல்ல, “இந்த மாற்றத்தை நிறைவேற்றுவதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்பதையும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.
அப்போது சட்டென்று குரல் உயர்த்திய துரைமுருகன், “வேலூரில் என்ன மாற்றத்தை செய்யப் போகிறீர்கள்? ” என்று கேட்க, “வேலூர் தவிர உங்களுக்கு வேறு சிந்தனையே இருக்காதா?” என்று எரிச்சலுடன் ஸ்டாலின் சொல்லவும் துரைமுருகனுக்கு சுள்ளென கோபம் உச்சு மண்டைக்கு ஏறிவிட்டது.
உடனே கடும் கோபத்துடன், சில வார்த்தைகளை அவர் உச்சரிக்க, பதிலுக்கு ஸ்டாலின் கோபம் காட்டவும், கூட்டத்திலிருந்து எழுந்து வெளியே செல்ல ஆயத்தப்பட்டார் துரைமுருகன். பிறகு உடனே, நேரு, ராசா, பொன்முடி ஆகியோர் துரையை சமாதானப்படுத்தி உட்கார வைத்தனர். சில நிமிடங்கள் இறுக்கமாக செல்ல, அதனை கலைக்கும் வகையில், சீர்திருத்த பிரச்னை குறித்து கனிமொழி பேசத் துவங்கவும்தான், அதற்கு பிறகுதான் சகஜ நிலைக்கு ஸ்டாலினும், துரையும் வந்தனர்.
அதன் பிறகு நிறைய விஷயங்கள் பேசப்பட்டு சில முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்ட பிரச்னைகளைத் தாண்டி… ஸ்டாலினுக்கும் துரைமுருகனுக்கும் நடந்த மோதல்தான் திமுகவின் முக்கியஸ்தர்களிடம் ஹாட் டாபிக்காக இருக்கிறது.
ஆனால், ஸ்டாலினுக்கும் துரைமுருகனுக்கும் இடையே வெடித்திருக்கும் இந்த வார்த்தை மோதல், திமுகவின் அதிகார அமைப்பில் மூத்த தலைவர்களுக்கும், இளைய தலைமுறைக்கான சீர்திருத்த விருப்பங்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒரு தவிர்க்கமுடியாத முரண்பாட்டையே நமக்கு காட்டுகிறது.
அதாவது “பழைய தலைமுறைக்கும் புதிய மாற்றத்திற்கும்” இடையேயான அதிகாரப் போட்டி என்றே சொல்லலாம். கட்சி பலமடைய 70 வயதானவர்களுக்கு ஓய்வு கொடுத்து இளைஞர்களுக்குப் பதவி தர ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால், “இப்படி மாற்றினால் எங்கள் ஊரில் அதாவது வேலூரில், எங்கள் செல்வாக்கு போயிரும்” என்று துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்கள் பயந்து எதிர்க்கிறார்கள்.
கட்சிக்கு மாற்றம் தேவை என்றாலும், காலம் காலமாக இருக்கும் பெரிய தலைவர்களைப் பகைத்துக் கொள்ளவும் முடியாது என்பதால், இந்த சிக்கலை ஸ்டாலின் எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பதில் தான் திமுகவின் அடுத்தகட்ட அரசியலே இருக்கிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்…!


