காசாவில் தினமும் 40 பேர் கொலை இஸ்ரேல் அமைச்சரின் அதிர்ச்சி பேச்சு!

Advertisements

காசாவில் தினமும் 30 முதல் 40 பேரைக் கொல்ல வேண்டும் என இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விர் இலக்கு நிர்ணயித்துள்ளார். தினமும் இரவில் 30 முதல் 40 பாலஸ்தீனர்களை கொல்ல வேண்டும் என்றும், அச்சுறுத்தலாக இல்லாத நபர்களையும் இலக்கு வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2023 அக்டோபர் 7 அன்று நோவா இசை நிகழ்வில் ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட ரோம் பிராஸ்லாவ்ஸ்கி என்பவருடனான பாட்காஸ்ட் உரையாடலில் பென் க்விர் இக்கருத்தை தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, “எனக்கும் பிரதமருக்கும் கருத்து வேறுபாடு இருப்பது இரகசியமல்ல.

காசாவில் தினமும் இரவில் 30 முதல் 40 பேரைக் கொல்வதற்கு இலக்கு நிர்ணயித்து நாம் தாக்குதல்களை நடத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அந்த நேரத்தில் நமக்கு உடனடி ஆபத்தாக இருப்பவர்களை மட்டும் இலக்கு வைக்கக் கூடாது. அங்கு வாழத் தகுதியற்ற பலர் இருக்கிறார்கள். அவர்கள் வாழவேக் கூடாது. அவர்கள் மனிதர்களே அல்ல.

அதைச் செய்ய நான் உலகத்தையே தலைகீழாக மாற்றுவேன். அது நடக்கும் வரை என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று நான் வாக்குறுதி அளிக்கிறேன். முழு காசாவையும் நான் நமக்கே சொந்தமானதாகப் பார்க்கிறேன். காசா முழுவதிலும் யூதக் குடியேற்றங்களை அமைக்க வேண்டும்.

முடிந்தவரை பாலஸ்தீனர்களை இங்கிருந்து வெளியேற்றி அவர்களின் நாடுகளுக்கு அனுப்ப வேண்டும். தீவிரவாதிகளுக்கு வெளியேற்றமெல்லாம் இல்லை, அவர்களை ஒவ்வொன்றாகக் கொன்றழிக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் பயணக்கைதியாக பிடித்துச்செல்லப்பட்டதற்கு பழிதீர்க்க, ரோம் பிராஸ்லாவ்ஸ்கியே நேரடியாக இஸ்ரேல் வசம் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற அனுமதி அளிப்பதாகவும் பென் க்விர் வாக்குறுதி அளித்தார்.

இந்நிலையில் முடங்கியுள்ள காசா போர் நிறுத்தத்தில் முன்னேற்றம் காண்பதற்கான ஒரு புதிய இராஜதந்திர முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்கா சார்பில் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் டொனால்டு டிரம்ப்-இன் மருமகன் ஜாரெட் குஷ்னர், நேற்று ஹமாஸ் தலைவரை சந்தித்தார். இதுதவிர குஷ்னர் இன்று இஸ்ரேல் பிரதமரை நெதன்யாகுவை சந்திக்கிறார்.

காசாவில் ஹமாஸ் ஆயுதங்களை கைவிடுவதற்கும், போரினால் சிதைக்கப்பட்ட பாலஸ்தீனிய பகுதியில் இருந்து இஸ்ரேல் வெளியேறுவதற்கும் அமெரிக்காவின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட புதிய 15 அம்ச செயல்திட்டத்தை காப்பாற்றுவதே இந்த பேச்சுவார்த்தைகளின் நோக்கமாகும்.

முக்கிய இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்த போர்நிறுத்தம் ஏற்பட்டு 10 மாதங்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில், காசாவில் உள்ள சுமார் 20 லட்சம் மக்களின் உயிர்களும், தற்போது பெருமளவில் இஸ்ரேலிய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த நெரிசலான பகுதியின் புனரமைப்பும் கேள்விக்குறியாகியுள்ளன.

கடந்த ஆண்டு எகிப்தில் குஷ்னர், சக தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஹமாஸ் தலைவர்களுக்கு இடையே நடந்த சந்திப்பு, போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்த உதவியது. ஹமாஸின் ஆயுத களைவு என்ற முக்கிய பிரச்சினையால் இதுவரை அதன் முன்னேற்றம் தடைபட்டிருந்தது.

எகிப்தில் ஹமாஸின் கலீல் அல்-ஹய்யாவுடன் நடந்த அரிதான சந்திப்பை, ஒரு பிராந்திய அதிகாரியும் ஒரு ஹமாஸ் அதிகாரியும் உறுதிப்படுத்தினர். செய்தியாளர்களிடம் பேச அவர்களுக்கு அதிகாரம் இல்லாததால், அவர்கள் இருவரும் தங்கள் அடையாளத்தை வெளியிட விரும்பவில்லை.

அல்-ஹய்யாவை சந்தித்த மூன்று தூதர்கள் கொண்ட குழுவில் குஷ்னரும் ஒருவர்; மத்தியஸ்த நாடுகளான எகிப்து, கத்தார் மற்றும் துருக்கி ஆகியவற்றின் அதிகாரிகளும் அங்கு இருந்தனர். இஸ்ரேலின் மிக நெருங்கிய கூட்டாளியான டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான தனது அரிதான பகிரங்க எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த வாரம் 15 அம்ச திட்டத்தை நிராகரித்தார்.

தற்போது குஷ்னர், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் மற்றும் போர் நிறுத்தத்தை மேற்பார்வையிடும், அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட அமைதி வாரியத்தின் இயக்குனர் நிக்கோலே மிலாடெனோவ் ஆகியோர் திங்கட்கிழமை நெதன்யாகுவை சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பு குறித்து விவாதிப்பதற்காக, இருவரும் தங்களது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையின் பேரில் பேசினர்.

ஆக காசாவில் நடக்கப்போகும் உயிர் பலிக்கு டிரம்ப் முற்றுக்கட்டை போட்டு தடுத்து நிறுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *