
தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படும். கன்னியாகுமரியிலிருந்து கிளம்பியுள்ள அலை நீண்டதூரம் பயணிக்கும் எனப் பிரதமர் மோடி பேசினார்.
கன்னியாகுமரி, நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்தச் சூழலில் பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாகத் தமிழகத்தை குறி வைத்துத் திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை போன்ற பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு திரட்டிச் சென்றார். இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பா.ஜனதா கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று நடை பெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழில் தனது பேச்சைத் தொடங்கினார்பிரதமர் மோடி.
அப்போது பேசிய பிரதமர் மோடிசகோதர சகோதரிகளேயெனக் கூறி பேசத்தொடங்கிய பிரதமர் மோடி கூறியதாவது:- மக்களைக் கொள்ளையடிக்கவே எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க நினைக்கிறார்கள். தி.மு.கவை வீழ்த்திப் பா.ஜ.க ஆட்சியை அமைப்போம். இந்தியா கூட்டணி கட்சிகளின் கர்வத்தை தமிழகம் அடக்கும். நாட்டைத் துண்டாட வேண்டும் என்று நினைத்தவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள்”கன்னியாகுமரி மக்களைப் பாஜக நேசிக்கிறது. திமுக காங்கிரஸ் கூட்டணி கன்னியாகுமரி மக்களை வஞ்சிக்கிறது. மீனவ மக்களின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் துறைமுக கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ரூ.50,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை பணிகள் நிறைவடைந்துள்ளது. ரூ.70,000 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகின்றன.
ரயில்வே பணிகளுக்காக ரூ.6,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படும். கன்னியாகுமரியிலிருந்து கிளம்பியுள்ள அலை நீண்டதூரம் பயணிக்கும். பாஜகதான் பெண்களுக்குத் தனி மதிப்பு கொடுக்கும் கட்சி. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. திமுக – கங்கிரஸ் செய்த தவறுக்கு கணக்கு கூற வேண்டும்-
இவ்வாறு பிரதமர் மோடி.கூறினார்.



