
முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த Z+ பாதுகாப்பு தற்போது Z பிரிவாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி 100 நாட்களுக்கு மேல் ஆன நிலையில், பாதுகாப்பு தொடர்பான வழக்கமான அச்சுறுத்தல் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக Z+ பாதுகாப்பின் கீழ் மு.க.ஸ்டாலினுக்கு சுழற்சி முறையில் சுமார் 58 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். துப்பாக்கி ஏந்திய காவலர்கள் மட்டுமின்றி, குண்டு துளைக்காத வாகனம் மற்றும் சிக்னல் தடுப்பு கருவியான ஜாமர் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் வழங்கப்பட்டிருந்தன.
தற்போது Z பிரிவு பாதுகாப்புக்கு மாற்றப்பட்டுள்ளதால், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 22 பாதுகாப்புப் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டாலினின் இல்லத்தைச் சுற்றியிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் இதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய மற்றும் மாநில உளவுத்துறை அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட வழக்கமான பாதுகாப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும், அந்த அறிக்கையை ஆய்வு செய்த பின்னரே Z+ பாதுகாப்பை Z பிரிவாக குறைக்க முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, பாதுகாப்பு குறைக்கப்பட்ட விவகாரம் திமுக வட்டாரத்தில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வியடைந்ததையடுத்து, மு.க.ஸ்டாலினுக்கான Z+ பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக திமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, பாதுகாப்பு குறைப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் ஆளும் தரப்புக்கு எதிராக திமுக ஆதரவாளர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில், பாதுகாப்பு குறைப்பு என்பது தேர்தல் முடிவுடன் தொடர்புடைய அரசியல் நடவடிக்கை அல்ல என்றும், உளவுத்துறை அளிக்கும் அச்சுறுத்தல் மதிப்பீட்டின் அடிப்படையிலேயே முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பிரிவு நிர்ணயிக்கப்படுகிறது என்றும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.
நாட்டில் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் VVIP-க்களுக்கு அவர்களுக்கான அச்சுறுத்தல் மதிப்பீட்டின் அடிப்படையில் Z+, Z, Y+ மற்றும் Y உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு பிரிவுகள் வழங்கப்படுகின்றன. இதில் Z+ என்பது உயர்மட்ட பாதுகாப்பு பிரிவுகளில் ஒன்றாகும்.
Z+ பாதுகாப்பில் அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்புப் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவதுடன், குண்டு துளைக்காத வாகனம், ஜாமர் வசதி கொண்ட பாதுகாப்பு வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு வாகனங்களும் கான்வாயில் இடம்பெறும்.
Z பிரிவில் கமாண்டோக்கள் உள்ளிட்ட சுமார் 22 பாதுகாப்புப் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள் என கூறப்படுகிறது. குண்டு துளைக்காத வாகனம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வாகனங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால், மு.க.ஸ்டாலினின் Z+ பாதுகாப்பு Z ஆக குறைக்கப்பட்டிருப்பது அரசியல் ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இது வழக்கமான பாதுகாப்பு மதிப்பீட்டின் அடிப்படையிலான நடவடிக்கையா அல்லது தேர்தல் தோல்விக்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவா என்ற விவாதமும் தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.




