
அரூரில் இருசக்கர வாகன பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்ததால் கொங்கு வேளாளர் கவுண்டர் சங்கத்தினர் திருப்பத்தூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம் அரூரில் தீரன் சின்னமலை முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அரூரில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு இன்று இருசக்கர வாகன பேரணி நடத்த கொங்கு வேளாளர் கவுண்டர் சங்கத்தினர் திட்டமிட்டுருந்த நிலையில் இதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை.

இந்தநிலையில் இன்று நடைபெற இருந்த பேரணியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட கொங்கு வேளாளர் கவுண்டர் சங்கத்தினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது,

இதனை அடுத்து தலைவர் சந்திரசேகரன் தலைமையில் அரூர் திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக இருசக்கர வாகனங்களை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்பு சாலை மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் சேலம் திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


