
சேலம் சங்ககிரி அருகே கண்டெய்னர் லாரிமீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் பயணிகள் 11 பேர் படுகாயம்அடைந்தனர். இந்த விபத்துகுறித்து சங்ககிரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்: கோவையிலிருந்து தனியார் சொகுசு பேருந்து ஒன்று 25 பயணிகளை ஏற்றிக் கொண்டு பாண்டிச்சேரிக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்ஸை கடலூரைச் சேர்ந்த ஓட்டுநர் பிரேம்குமார் என்பவர் ஓட்டிச் சென்றார். நள்ளிரவு 2 மணி அளவில் சங்ககிரி அடுத்து வைகுந்தம் சுங்கச்சாவடி அருகில் சென்றபோது எதிர்பாராத விதமாக முன் பக்க டயர் வெடித்து முன்னால் சுங்க கட்டணம் செலுத்தி கொண்டிருந்த கண்டனர் லாரிமீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது.இதில் பேருந்து ஓட்டுநர் பிரேம்குமார் உள்ளிட்ட 11 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.காயமடைந்த அனைவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்ககிரி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சேர்த்தனர். மேலும் சம்பவம் அறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த சங்ககிரி தாசில்தார் அறிவுடைநம்பி காயமடைந்தவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.இந்த விபத்துகுறித்து சங்ககிரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



