
சட்டமன்றத்தில் அமைச்சர் மரியவில்சன் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து குறித்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது பேசிய அமைச்சர் மரியவில்சன், “என் மதம் எனக்கு கற்றுத் தந்ததை எத்தனை தமிழ் படித்தாலும் தெரிந்து கொள்ள முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார். அமைச்சரின் இந்தக் கருத்து தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நயினார் நாகேந்திரன், தமிழ் மொழியின் ஆளுமையுடன் ஒரு மதத்தை ஒப்பிட்டுப் பேசுவது முறையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“எம் தமிழ் மொழியின் ஆளுமையுடன் ஒரு மதத்தை ஒப்பிட்டு பேசுவது சரியா அமைச்சரே? பிறப்பால் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் உணர்வால் நாம் அனைவரும் தமிழர்கள். உணர்ச்சி மிகுதியில் தமிழ் மொழி மீதான தவறான விமர்சனத்துக்கு மரியவில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மொழியின் பெருமையையும், தமிழர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த விவகாரத்தில் அமைச்சர் மரியவில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





