
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து, தமிழக வெற்றிக்கழககம் தரப்பில், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை, உச்சநீதிமன்றம் வரும் திங்கட்கிழமை அறிவிக்கின்றது.
கரூரில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில், கடந்த 27-ஆம் தேதி ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41-பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சூழ்நிலையில், அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோவிற்கு, வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும்.
அதுவரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்; வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார், இந்த விவகாரத்தை கோர்ட்டு கண்மூடி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. கலவரம் நடப்பது போல் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். அனைத்தையும் காவல்துறை அனுமதித்துள்ளது என சரிமாரியான கேள்விகளை எழுப்பினார்.
விசாரணை நிறைவில், கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கை விசாரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ராகர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவிற்கு எதிராக, தமிழக வெற்றிக்கழகத்தின், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ்அர்ஜுனா சார்பில், வழக்கறிஞர் எஸ்.விஜய் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. வழக்கில் காரசார விவாதங்கள் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வரும் திங்கட்கிழமை 13-ஆம் தேதி தெரிவிக்கின்றது.




