
கடந்த 11-ஆண்டுகளில் வேளாண் விளைபொருட்களின் ஏற்றுமதி இருமடங்காக அதிகரித்துள்ளதாக, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உணவு தானியங்களின் விளைச்சலை அதிகரிக்கும் திட்டத்தையும், பயறு வகைப் பயிர்களுக்கான திட்டத்தையும், தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்த நாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, ரூபாய் 24 ஆயிரம் கோடி மதிப்பீட்டில், தானியங்களின் விளைச்சலை அதிகரிக்கும் திட்டத்தையும், ரூபாய் 11 ஆயிரத்து 440 கோடி மதிப்பீட்டில், பயறு வகைகளின் விளைச்சலில், தன்னிறைவு அடையும் திட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
மேலும், வேளாண்மை, கால்நடைப் பராமரிப்பு, மீன்வளம், உணவுப் பதப்படுத்தல் ஆகிய துறைகளில், ரூபாய் 5-ஆயிரத்து 450 கோடி மதிப்பிலான திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது, நாட்டின் வளர்ச்சிக்கு, வேளாண்மை இன்றியமையாதது என்றும், அதற்கு அரசின் ஆதரவு தேவை என்றும், தமக்கு முந்தைய அரசுகள் வேளாண்மையைக் கைவிட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும், கடந்த 11-ஆண்டுகளில், வேளாண் விளைபொருட்களின் ஏற்றுமதி இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும், உணவுதானிய விளைச்சல் முன்பிருந்ததைவிட 9 கோடி டன் அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். மேலும், நம்நாடு பால் உற்பத்தியில் உலகில் முதலிடத்திலும், மீன்பிடிப்பில் இரண்டாமிடத்திலும் உள்ளதாகவும், தேன், முட்டை ஆகியவற்றின் உற்பத்தி, கடந்த 11-ஆண்டுகளில், இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.


