அரசு நர்சிங் கல்லூரி மாணவர்களை நிர்வாணமாக்கி சித்ரவதை – 5 பேர் கைது!

Advertisements

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோட்டயம் காந்திநகர் பகுதியில் அரசு நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் அந்தக் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவர்களை, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் கொடூரமான முறையில் சித்ரவதை செய்து ராக்கிங்கில் ஈடுபட்டிருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.

முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் சிலரை, அவர்கள் கல்லுரியில் சேர்ந்ததில் இருந்தே மூன்றாம் ஆண்டு படிக்கும் 5 மாணவர்கள் ராக்கிங் செய்திருக்கின்றனர்.

அவர்கள் முதலாமாண்டு மாணவர்களின் அந்தரங்க உறுப்பில் எடைதூக்கும் கருவியை (டம்பில்ஸ்) தொங்கவிடுதல், விரல் நகங்களுக்கு இடையே ஊசியால் குத்துதல் எனப் பல்வேறு சித்ரவதைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.

சித்ரவதை காரணமாக ஏற்பட்ட காயங்களில் முகப்பொலிவு மற்றும் தோல் சுருக்கங்களுக்குப் பயன்படுத்தம் லோசன்களை அதிகளவில் தடவி விட்டிருக்கின்றனர்.

அந்த லோசனை முகம், தலை மற்றும் வாய் உள்ளிட்ட இடங்களிலும் தேய்த்துவிட்டு ராக்கிங் செய்திருக்கின்றனர்.

மேலும் சில மாணவர்களுக்கு வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்திருக்கின்றனர். மாணவர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட அனைத்தையும் வீடியோ எடுத்துப் பணம் கேட்டு மிரட்டியிருக்கின்றனர்.

சீனியர் மாணவர்கள் ராக்கிங் என்ற பெயரில் தொடர்ந்து கொடூரமாகச் சித்ரவதை செய்தபடி இருந்தால், அதுபற்றி முதலாமாண்டு மாணவர்கள் சிலர், தங்களின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், முதலாமாண்டு மாணவர்கள் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியபிறகே, முதலாமாண்டு மாணவர்களைச் சீனியர் மாணவர்கள் மிகவும் கொடூரமாகச் சித்ரவதை செய்து ராக்கிங்கில் ஈடுபட்ட தகவல் வெளியானது.

விசாரணையில் முதலாமாண்டு மாணவர்கள் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டது உறுதியானதால் அது தொடர்பாக வழக்கு பதிந்தனர்.

ராக்கிங்கில் ஈடுபட்ட மூன்றாம் ஆண்டு மாணவர்களான கோட்டயத்தை சேர்ந்த சாமுவேல், விவேக், வயநாட்டை சேர்ந்த ஜீவா, மலப்புரத்தை சேர்ந்த ரிஜில்ஜித், ராகுல்ராஜ் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 5 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது.

அரசு நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களைச் சீனியர் மாணவர்கள் கொடூரமாகச் சித்ரவதை செய்து ராக்கிங்கில் ஈடுபட்ட சம்பவம் கோட்டயத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *