
அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் திண்டுக்கல் சூரியமூர்த்தி ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பி.எஸ் உட்பட அனைத்து தரப்பின் கருத்துகளைக் கேட்கச் சூரியமூர்த்தி கோரியிருந்தார்.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம் இது தொடர்பாக 4 வாரங்களில் முடிவெடுக்கக் கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி உத்தரவிட்டது.
இதனால் புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், சூரியமூர்த்தி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் தங்களது தரப்பு வாதங்களை மனுக்களாகத் தாக்கல் செய்தனர்.
இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.
அந்த முறையீட்டு மனுவில், அ.தி.மு.க.வில் உறுப்பினராகவே இல்லாதவர்கள் எப்படி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்ய முடியும்? தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தரப்பின் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம்குறித்த தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இது தொடர்பான வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்ககு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பைப் பிப்ரவரி 12-ந்தேதி (இன்று) ஒத்திவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் வழங்கினர். அப்போது, அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாகத் தெரிவித்த நீதிபதிகள், ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி.பழனிசாமி மனுக்களை ஏற்று தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த அனுமதி வழங்கி, எடப்பாடி பழனிசாமியின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யும் விவகாரத்தில் சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும். அ.தி.மு.க. பொதுக்குழு குறித்த மனுக்களையும் தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டனர்.
