Dhanurasana: சீரணக் கோளாறுகளைச் சரி செய்யும் ஆசனம்!

Advertisements

சீரணக் கோளாறுகளைச் சரி செய்யும் தனுராசனம்!

நின்ற தனுராசனம். இதை ப்ரசாரித பாதோத்தானாசனத்திற்கு மாற்று ஆசனமாகச் செய்யலாம். தனுராசனம் என்றால் வில் நிலை ஆகும். இதை குப்புறப்படுத்தும் செய்யலாம். நின்ற நிலையிலும் செய்யலாம். இவ்வாசனத்தின் பலன்கள் நம்மை பிரமிப்படைய வைக்கிறது. இந்த ஆசனத்தைச் செய்வதனால் இரத்த ஓட்டம் செழுமையடையும், நரம்பு வீரியமாகும். உடலின் அணுக்கள் புதுப்பிக்கப்பட்டு இளமை ஓங்கியிருக்கும். இவ்வளவு உயர்ந்த நன்மைகள் நமக்கு இந்த ஆசனத்தின் மூலம் கிடைக்க என்ன காரணம்? முதலில் அதை புரிந்து கொள்வோம்.

முதலில் வில்லைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். வளையாத நேரான திடமான கம்பை வளைத்து நாண் பூட்டுவதுதானே வில்? கம்பு எவ்வளவு இறுக்கமாக வளைகிறதோ வில்லின் எய்யும் திறன் அவ்வளவு அதிகமாக இருக்கும். அம்பின் வேகத்தை வில்தானே தீர்மானிக்கிறது. அம்பிற்குத் தனியாக பலம் இல்லை. அதனால்தான், “எய்தவன் இருக்க அம்பை நோவானேன்” என்று பழமொழி கூறுகிறது. நம் உடலில் உள்ள வில் எது? சரியாகச் சொன்னால், வில்லுக்கான கம்பு எது என்பதுதான். நம் உடலின் பின்பகுதியிலுள்ள முதுகுத்தண்டுதான் அந்த கம்பு. இந்த கம்பிலிருந்துதான் அனைத்து உறுப்புகளுக்கும் இயக்க சக்தி போய்க் கொண்டிருக்கிறது.


அந்த இயக்க சக்திதான் அம்பு. இந்த அம்பு, வேகமாக, கூர்மையாக இலக்கை அடைய வேண்டுமானால், வில் திடமானதாக இருக்க வேண்டும். அதாவது, நமது தண்டுவடம் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும். பரிணாம வளர்ச்சியில் நாம் ஆறறிவு படைத்த சமூக விலங்காக மாறியதற்குக் காரணமே படுக்கை நிலையிலிருந்த முதுகுத்தண்டை அதன் எதிர்த்திசையில் நிமிர்த்தியதால்தான் என்கிறது அறிவியல். ஆக, முதுகுத்தண்டை அதன் எதிர்த்திசையில் வளைப்பதனால் அளப்பறிய பலன்களைப் பெற முடியும்.

அப்படி வளைப்பதற்கான பயிற்சிதான் இந்த ஆசனம். இந்த ஆசனத்தில் முதுகைப் பின்னோக்கி வளைக்கும்போது குறிப்பாக முதுகுத்தண்டு வளைகிறது. அதன் மூலம் தண்டுவடம் முழுதும் உயிர்சக்தி பாய்ந்துத் தண்டைப் பலப்படுத்துகிறது. அதன் மூலம் அனைத்து உறுப்புகளுக்கும் இயக்க சக்தி அபரிமிதமாக பாய்கிறது. உயிராற்றல் வளர்கிறது. மேல் சொன்ன உயர்வான நன்மைகளுக்கு அதுவே காரணம்.

முதுகுத்தண்டு எனும் வில்லை வளைத்து, கைகளால் கால்களைப் பிடித்து நாண் பூட்டி இயக்க சக்தி எனும் அம்பை எய்வதால் இதற்கு தனுராசனம் என்று பெயர்.

நின்ற தனுராசனத்தின்  சில பலன்கள்:

மேற்குறிப்பிடப்பட்டுள்ள பலன்களை முழுமையாகப் படித்தாலே இந்த ஆசனத்தை விடாமல் செய்யத் தொடங்குவீர்கள். உங்களை மேலும் ஊக்குவிக்க, இதோ, நின்ற தனுராசனம் இடுப்பைப் பலப்படுத்துகிறது.
நுரையீரலின் செயல்பாடுகளைச் செம்மையாக்குகிறது.இருதய நலனைப் பாதுகாக்கிறது.கழுத்து மற்றும் தோள்களின்இறுக்கத்தைத்தளர்த்துகிறது.வயிற்றுஉள்உறுப்புகளின்செயல்பாடுகளைமேம்படுத்துகிறது.சீரணக் கோளாறுகளைச் சரி செய்கிறது.முதுகு வலியைப் போக்க உதவுகிறது.சிறுநீரகத்தைப் பலப்படுத்துகிறது.

செய்முறை:


நின்ற தனுராசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.இரண்டு கால்களுக்கு இடையில் ஒன்று அல்லது ஒன்றரை அடி இடைவெளி விட்டு விரிப்பில் நிற்கவும்.கைகளை முதுகுக்கு பின்னால் வைக்கவும்.மூச்சை இழுத்தவாறே பின்னால் வளையவும்.வளைந்த நிலையிலே ஒவ்வொரு கையாக கால் முட்டிக்குச் சற்று கீழ் வைக்கவும்.20 வினாடிகள் சாதாரண மூச்சில் இந்த நிலையில் இருந்த பின், மூச்சை வெளியில் விட்டவாறே பழைய நிலைக்கு திரும்பவும்.

குறிப்பு:

கழுத்து, தோள், இடுப்பு, முதுகு ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் நின்ற தனுராசனம் செய்வதைத் தவிர்க்கவும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *