
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் திருட்டைத் தவிர்க்க சி.சி.டி.வி.கேமரா பொருத்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நன்கொடையை வணிகர் சங்கத்தினர் வழங்கினார்கள்.. திருக்காட்டுப்பள்ளியில் கடைவீதி, மற்றும் முக்கிய வீதிகளில் ஏற்படும் கூட்ட நெரிசல், கடைகளின் அருகில் சாலையிலேயே இருசக்கர வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
மேலும் பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்களை கண்காணிக்கவும், இருசக்கர வாகனங்கள் திருட்டு, போன்ற பல்வேறு காரணங்களுக்காக சி.சி.டி.வி.கேமரா பொருத்தப்பட்டு போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த கேமராக்கள் பழுதடைந்து வேலை செய்யாமல் போகவே, திருக்காட்டுப்பள்ளி ஆய்வாளர் அகிலன், இங்குள்ள வணிகர்கள் கூட்டமைப்பினரிடம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, அனைத்து வணிகர்கள் கூட்டமைப்பின் சார்பில் திருக்காட்டுப்பள்ளி கடைவீதி முழுவதும் தொடர் கண்காணிப்பில் இருப்பதை உறுதிபடுத்துவதற்காக காவல்துறை ஆய்வாளர் அகிலனிடம் சி.சி.டிவி.வைக்க ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.



