
குறுவைத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு 70 நாள் ஆகியும் உழவர்களுக்கு வழங்கப்படவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு முழுவதும் குறுவை சாகுபடி செய்யும் உழவர்களுக்கு உரம், விதைகள் மற்றும் நேரடி உதவி எனப் பல வடிவங்களில் ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் வகையில் குறுவைத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு, 70 நாளாகியும் இன்று வரை வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். மிகவும் நெருக்கடியான காலத்தில் உழவர்களுக்குக் கிடைக்க வேண்டிய குறுவைத் தொகுப்பை வழங்குவதில் அலட்சியம் காட்டப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
10 நாள்களில் கொள்முதல் பருவம் தொடங்கவுள்ள நிலையில், இன்று வரை குறுவைத் தொகுப்பு வழங்கப்படாமல் இருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். உழவர்களுக்கான உதவி என்பது அவசரச் சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயருக்கு ஆக்சிஜன் வழங்கப்படும் வேகத்தில் அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இதை அரசு உணர்ந்து கொண்டு உழவர்களுக்கான குறுவைத் தொகுப்பை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.



