A. R. Rahman Concert: பிரபலங்கள் ஆதரவு!

Advertisements

ஏ.ஆர்.ரஹ்மான் இசைநிகழ்ச்சியில் ஏற்பட்டு குளறுபடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் அதிருப்தி எழுப்பி இருந்தனர். பலரும் ஏ.ஆர்.ரஹ்மானை படு மோசமாக விமர்சித்து வருகின்றனர். அதே நேரம் அவருக்கான ஆதரவு குரலும் வலுத்து வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பனையூரில் உள்ள மைதானம் ஒன்றில் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இங்கு 25 ஆயிரம் பேர்வரை கலந்து கொள்ள இடம் இருந்த நிலையில், 40 ஆயிரம் பேர்வரை கூடியுள்ளனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இருக்கைகளை மீறி டிக்கெட் விற்பனை செய்ததே அதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதுபற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது. பலரும் ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்தனர். இந்நிலையில், நடிகை குஷ்பூ தனது எக்ஸ் தளத்தில், சென்னை கச்சேரியில் AR ரஹ்மான் ரசிகர்கள் எதிர்கொண்ட பெரும் குழப்பம் மற்றும் சிரமங்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன். ரஹ்மான் எப்போதும் தனது ரசிகர்கள் ஏமாற்றமடையாமல் பார்த்துக் கொள்வார். டயமண்ட் பாஸ் இருந்தும் அனுமதி மறுகப்பட்டவர்களில் எனது மகளும் ஒருவர்.  அவர்கள் அந்த இடத்தை அடைய 3 மணி நேரத்திற்கு மேல் ஆனது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆனாலும் இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பொறுப்பேற்க முடியாது.

ARR நேரலை நிகழ்ச்சிக்காக நிரம்பி வழியும் கூட்டத்தைப் பற்றி உணராத நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் முழுமையான தோல்வி இது. ரஹ்மான் தனது இசை, வார்த்தைகள் மற்றும் செயல்கள்மூலம் எப்போதும் அன்பையும் அமைதியையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அவருடன் நின்று, எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுவோம் எனத் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள பதிவில், நாங்கள் ரஹ்மான் சாரை 3 தசாப்தங்களுக்கும் மேலாக அறிந்திருக்கிறோம், நேசிக்கிறோம்… கச்சேரியின்போது நடந்தது துரதிர்ஷ்டவசமானது. இருப்பினும், அவர் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார் என்று தெரியும். ரஹ்மான் சார் எப்போதும் தனது அன்பை அனைவருக்கும் கொடுப்பதால், அவர்மீது வெறுப்பை விட அன்பை கொடுங்கள் என அனைத்து ரசிகர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

ஏஆர் ரஹ்மான் மகள் கதிஜா ரஹ்மானின் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அவர் எக்ஸ் தளத்தில் ஷேர் செய்துள்ள ஒரு பதிவில், நிகழ்ச்சி அன்று நடந்த அனைத்து தவறுகளுக்கும் 100 சதவீதம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே காரணம். ஆனாலும் ரஹ்மான் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நெஞ்சே எழு இசைகச்சேரியை நடத்தினார். 2018-ம் ஆண்டு கேரள மழை வெள்ள பாதிப்புகளுக்கு உதவ வெளிநாட்டில் ஒரு இசைக்கச்சேரியை நடத்தினார். கோவிட் சமயத்தில் பல குடும்பங்களுக்கு உதவினாரென அந்தப் பதிவில் இடம்பெற்றுள்ளது. அதோடு ஏ.ஆர்.ரஹ்மான் பற்றித் தவறாகப் பேசும் முன் யோசியுங்கள் எனவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கதீஜா ஷேர் செய்த பதிவு ஏ.அர்.ரஹ்மான் ரசிகர்களால் உருவாக்கப்பட்டது தான். இவர்களை அடுத்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட பதிவில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தயாரிப்பாளர்களும் இந்தச் சம்பவத்தைக் கவனத்தில் கொள்ளவேண்டியது முக்கியம். நாங்கள் மேடையில் பாடிக்கொண்டிருக்கும்போது அனைத்தும் சுமூகமாக நடப்பதையும், மக்கள் பாதுகாப்பாக இருப்பதையும் கண்காணிக்க தயாரிப்பாளர்கள்மேல் நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம். இது போன்ற சம்பவங்கள் நடப்பது உண்மையில் மனதை கனக்கச் செய்கிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும்  திட்டமிடல் உள்ளிட்ட விஷயங்களில் தீவிரமாகப் பங்கெடுக்க அனைத்து கலைஞர்களுக்கு இந்தச் சம்பவம் எச்சரிக்கை மணியாக அடித்திருக்கிறது. இந்த விஷயத்தில் சக கலைஞராக நான் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நான் நிற்கிறேன்” எனத் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து பல பிரபலங்கள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாகப் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *