
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 15 வயதுச் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது திமுக அரசின் சட்டம் ஒழுங்குச் சீர்குலைவுக்குச் சான்றாகும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், செய்யாறு அருகே, சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்குக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்ததாக வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியும் கோபமும் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற கொடூரங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவது, திமுக அரசின் சட்டம் ஒழுங்குச் சீர்குலைவுக்குச் சான்று எனத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையும், சட்டத்தின் மீதோ, காவல்துறை மீதோ, குற்றவாளிகளுக்கு எந்த அச்சமும் இல்லாத நிலையும் தமிழகத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.



