
பகல்காமில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய படுகொலையை இந்தியா மறக்காது என்றும், இந்தப் படுகொலையில் உறவுகளை இழந்தவர்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் நாள் ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் சுற்றுலா சென்ற பொதுமக்களைப் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தக் கொடிய துயரத்தின் ஓராண்டு நிறைவையொட்டி அதை நினைவுகூர்ந்துள்ள இந்திய ராணுவம், எல்லை தாண்டிப் பயங்கரவாதச் செயல்களைச் செய்யும் பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதில் மனிதநேயத்தின் எல்லைகள் மீறப்படும்போது, அதற்கான பதிலடி கடுமையாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. பகல்காம் படுகொலையில் உறவுகளை இழந்தவர்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்தியா ஒன்றிணைந்து நிற்பதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
சில எல்லைகளை ஒருபோதும் தாண்டக்கூடாது என்றும், இந்தியா இதை மறப்பதில்லை என்றும் இராணுவம் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.




