
79ஆம் ஆண்டு விடுதலை நாளையொட்டித் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னைக் கோட்டையில் விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டது. கொத்தளத்தில் உள்ள கொடிமரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.கோட்டை முகப்பில் நடைபெற்ற காவல்துறையினரின் அணிவகுப்பையும் முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.விடுதலை நாள் விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கான மாத ஓய்வூதியத்தை 22 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவதாகவும், விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்ப ஓய்வூதியத்தை 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவதாகவும் அறிவித்தார்.விடுதலை நாளையொட்டி விருதுகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். துணிச்சல் மற்றும் வீரசாகசத்துக்கான கல்பனா சாவ்லா விருதைக் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த துளசிமதிக்கு வழங்கினார்.

அப்துல்கலாம் விருதுக்கான தங்கப் பதக்கம், காசோலை பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை நாராயணனுக்கு வழங்கினார்.
காதர் மொகிதீனுக்குத் தகைசால் தமிழர் விருதுடன் பத்து இலட்ச ரூபாய்க்கான காசோலையையும் முதலமைச்சர் வழங்கினார்.
மாற்றுத் திறனாளிகளைப் பெருமளவில் பணியமர்த்தியதற்காகப் பெல் பிரிண்டர்ஸ் நிறுவனத்துக்கு விருது வழங்கப்பட்டது.
சிறந்த நல் ஆளுமை விருது தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநர் கோமகனுக்கு வழங்கப்பட்டது.



