
இந்தோனேசியாவில் 7 புள்ளி 7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிக் குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேசியாவில் புளோரஸ் தீவில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. புவிக்குக் கீழே 15 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 7 ஆகப் பதிவானதாகவும் இந்தோனேசியப் புவி அறிவியல் துறை தெரிவித்துள்ளது.
இந்த வலுவான நிலநடுக்கத்தை அடுத்துப் பின்னதிர்வாக ஆறு புள்ளி ஒன்று ரிக்டர் என்னும் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட உடனே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மூன்று மணி நேரத்துக்குப் பின் அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மாவுமீர் துறைமுகத்தில் கட்டடங்கள் இடிந்து அங்குப் படகுக்காகக் காத்திருந்த பயணிகள் மீது விழுந்தன. சிலர் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
அதிகாலை நேர்ந்த நிலநடுக்கம் என்பதால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் உறக்கத்திலேயே பலர் உயிரிழந்ததாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். இடிபாடுகளில் சிக்கிக் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாகவும், பல்லாயிரம் பேர் பாதுகாப்பான வேறிடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


