
அநீதி, அராஜகம், தில்லுமுல்லுக்குத் திமுக முதற்றே உலகு என்றும், தீயசக்தி திமுகவைத் தூய சக்தியான தவெக வீழ்த்தும் என்றும் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா சென்னை அருகே பனையூரில் உள்ள அந்தக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் தலைவர் விஜய், நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்துகொண்டனர். மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகளும் மகளிரணியைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய விஜய், தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சியாகத் தமிழக வெற்றிக் கழகம் வளர்ந்துள்ளதாகக் கூறினார். அநீதி, அராஜகம், தில்லுமுல்லுக்குத் திமுக முதற்றே உலகு என்றும், தீயசக்தி திமுகவைத் தூய சக்தியான தவெக வீழ்த்தும் என்றும் கூறினார். தவெகவுக்குக் கிடைத்துள்ள விசில் சின்னத்தின் ஊதலில் தீயசக்தியான திமுக தெறித்துஓடும் என்றும் விஜய் கூறினார்.
எம்ஜிஆர் கட்சி தொடங்கித் தேர்தலைச் சந்தித்தபோது விமர்சித்தவர்கள் இப்போதும் தன்னைப் பார்த்து அதேபோல விமர்சிப்பதாக விஜய் கூறினார்.


