
உத்தரபிரதேசத்தில் வாடகை கேட்டு வீட்டுக்கு வந்த உரிமையாளரை தம்பதி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஆவுரா சினிமா குடியிருப்பு பகுதியில் உமேஷ் என்பவர் மனைவி தீப்ஷிகா சர்மாவுடன் வசித்து வந்தார். தீப்ஷிகா சர்மா ஆசிரியையாக பணி புரிந்து வந்தார்.
இந்த தம்பதி இதே பகுதியில் தங்களுக்கு சொந்தமான பிளாட் ஒன்றை அஜய்குப்தா என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். கடந்த 4 மாதங்களாக அஜய்குப்தா வீட்டு வாடகை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தீப்ஷிகா சர்மா வாடகை கேட்டு அஜய் குப்தா வீட்டுக்கு நேற்று சென்றுள்ளார்.
அப்போது, வீட்டுக்குள் கூப்பிட்டு, பிரஷர் குக்கரால் தீப்ஷிகாவை தாக்கி துப்பாட்டாவால் கழுத்தை இறுக்கி அஜய் சர்மாவும் அவரின் மனைவி அக்ரிதியும் கொலை செய்துள்ளனர். இந்த நிலையில், தீப்ஷிகா சர்மாவின் வீட்டில் வேலை பார்க்கும் பணிப் பெண் மீனா, உரிமையாளரை தேடி அஜய் ஷர்மா வீட்டுக்கு சென்றுள்ளார்.
அவர்களிடத்தில் கேட்ட போது, தீப்ஷிகா இங்கு வரவில்லை என்று உறுதியாக கூறியுள்ளனர். இதையடுத்து, பணிப்பெண் மீனா, சிசிடிவி கேமராவை ஆய்வு செய்துள்ளார். அப்போது, தீப்ஷிகா சர்மா அஜய்குப்தா வீட்டுக்கு சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட மீனா, போலீசாருக்கு தகவல் அளித்தார்.
தொடர்ந்து, போலீசார் வீட்டை சோதித்த போது, மிகப் பெரிய சூட்கேசில் தீப்ஷிகா சர்மாவின் உடல் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார், தம்பதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



