
நான் கலைஞர் பேரன் எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது நான் கடவுளாகப் பார்ப்பது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தானென அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையில் அறிவித்த மகப்பேறு திட்டங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன்படி பாதுகாப்பான மகப்பேறு மற்றும் ககப்பிரசவங்களை ஊக்குவிக்கும் வகையில் மகப்பேறு செவிலியர் வழி நடத்தும் பாராமரிப்பு மற்றும் பயிற்சி பிரிவு, PICME என்னும் மகப்பேறு மற்றும் சிசு கண்காணிப்பு மென்பொருள் 3.O, மாநிலத்தில் செயல்படும் 129 ஒருங்கிணைந்த அவசர கால மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்கள், 385 வட்டார சுகாதார மையங்கள் மற்றும் 39 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சக்கரங்களுடன் கூடிய அடுக்கு பெட்டகங்கள், 1.16கோடி செலவிலும், பிரசவத்திற்கு பிந்தைய இரத்தப் போக்கைத் தடுக்க இரத்த சேகரிப்பு திரை மற்றும் கருப்பை பலூன் டம்போனேட், 2.98 கோடி செலவிலும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியன், மேயர் பிரியா, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ககன் தீப்சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
*பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்*
மகப்பேறு இறப்பு விகிதத்தைக் குறைக்கும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துத் துறைமூலம் செயல்படுத்தப்படும் சிறப்பான இந்த நான்கு திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளோம்.
இந்த வாய்ப்பை வழங்கிய அமைச்சர் மா. சுப்ரமணியன் அண்ணாவிற்கு நன்றி என்றும் மா. சுப்ரமணியன் நிகழ்ச்சி நடத்தினால் ஒன்று முதல்வரை வைத்து நிகழ்ச்சி நடத்துவார் இல்லையென்றால் என்னை வைத்துத் தான் நிகழ்ச்சி நடத்துவார். ஏனென்றால் என்னுடைய துறையும் மக்கள் நல்வாழ்த்துறையும் ஒன்றோடு ஒன்று ஒன்றியது. மக்கள் நல்வாழ்வுத்துறையும் விளையாட்டு மேம்பாட்டு துறையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது என்றும் தெரிவித்தார். மேலும் நான் கலைஞர் பேரன்எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. நான் கடவுளாகப் பார்ப்பது இங்கு வந்துள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தான் என்றார்.
*அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன்*
தமிழகத்தில் சுகப்பிரசவ எண்ணிக்கை அதிகரித்துள்ளது.தொடர்ந்து எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பச்சிளம் குழந்தைகள் மற்றம் கர்ப்பிணி தாய்மார்களைப் பராமரிக்கப் பிக்மி என்ற மென்பொருள் பயன்பாட்டில் உள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் 11 லட்சம் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு கண்காணிக்க முடியும்.
திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் மாதம் ஒன்றுக்கு 750 முதல் 800 குழந்தைகள் பிறக்கிறது.பாரம்பரிய மருத்துவமனையாக இந்த மருத்துவமனை திகழ்கிறது.
இந்த மருத்துவமனை வளாகத்தில் 6 கோடி செலவில் புதிய கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது. மருத்துவ உபகரணங்கள் வாங்கிய பின் விரைவில் அந்தக் கட்டிடம் பயன்பாட்டிற்கு வரும். மேலும் இங்கு 27 கோடி செலவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தார்.

