
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய ஜனவரி 17-ம் தேதி வரையிலான ஆன்லைன் முன்பதிவு நிறைவடைந்தது.
சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு முன்பதிவு செய்யப்பட்டவர்களின் டிக்கெட்டுகள் சோதனை செய்யப்பட்ட பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ள பம்பா, நிலக்கல், எருமேலி ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது மண்டல பூஜைக்காக, கடந்த மாதம் 15 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. அதற்கு மறுநாள் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆன்லைன் பதிவுமூலம் நாள்தோறும் 70 ஆயிரம் பக்தர்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றனர். இதே போல், ’ஸ்பாட் புக்கிங் மூலம் 15 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், ஜனவரி 17 ஆம் தேதி வரையிலான ஆன்லைன் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. இதனால் ஸ்பாட் புக்கிங் வாயிலாக முன்பதிவு செய்து கொள்வதற்கு பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



