
திருத்தணி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்த போலீசார் இரண்டு பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் ஆந்திரா மாநிலத்திற்கு கடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கடத்தலை தடுக்கும் பொருட்டு, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை, காவல்துறை தலைவர் ஜோஷிநிர்மல்குமார் உத்தரவின் பேரில் DSP கீதா மேற்பார்வையில் திருவள்ளூர் ஆர்.கே.பேட்டை காவல் ஆய்வாளர் ஜெயசீலன் தலைமையில் போலீசார் ஆர்.கே.பேட்டை தாலுக்கா வங்கனூர், காமராஜ் நகர் மேற்கு தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த பதிவெண் இல்லாத முன்று சக்கர வாகனத்தைச் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில், அதில் சுமார் 50 கிலோ எடைக் கொளர்ட 50 மூட்டைகளில் மொத்தம் 2,500 கிலோ தமிழக பொது விநியோகத்திட்ட ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுசம்பந்தமாக, அரிசி கடத்தலில் வழக்குப் பதிவு செய்து, கைப்பற்றப்பட்ட இரண்டரை டன் ரேசன் அரிசியை திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிய கழக கிடங்கில் ஒப்படைத்தனர். இந்த ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரமேஷ் என்பவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
அதே போல் சப் இன்ஸ்பெக்டர் பாரத நேரு மற்றும் போலீசார் பள்ளிப்பட்டு தாலுக்காவிற்குட்பட்ட நல்லவனப்பேட்டையில் ஜெயவேல் என்பவரது வீட்டீல் சோதனை செய்தபோது, அவரது வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில், அதில் சுமார் 50 கிலோ எடைக் கொண்ட 22 மூட்டைகளில் மொத்தம் ஒரு டன் 100 கிலோ ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுசம்பந்தமாக, வழக்குப் பதிவு செய்து, 1 டன் 100 ரேசன் அரிசியை திருவள்ளூர் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். இந்த ரேசன் அரிசி பதுக்கலில் ஈடுபட்ட ஜெயவேல் என்பவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.


