VK Pandian vs modi:முடிந்தால் சாவிகளை கண்டுபிடித்துத் தாருங்கள்.. பிரதமர் மோடிக்கு வி.கே.பாண்டியன் பதிலடி!

Advertisements

புபனேஷ்வர் : பூரி ஜெகன்நாதர் கோயிலின் புதையல் அறை சாவிகளை முடிந்தால் பிரதமர் மோடியே கண்டுபிடித்துத் தரட்டும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியன் பதிலடி கொடுத்துள்ளார்.

ஒடிசாவின் கட்டாக் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, பிஜு ஜனதா தளத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியனை கடுமையாக விமர்சித்தார். 6 ஆண்டுகளாகப் பூட்டப்பட்டுள்ள பூரி ஜெகன்நாதர் கோயிலின் புதையல் அறை சாவிகளை அவர் தமிழ்நாட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள வி.கே.பாண்டியன், அளவற்ற அறிவாற்றலை பெற்றுள்ள பிரதமர் மோடி, பூரி ஜெகன்நாதர் கோயிலின் புதையல் அறையில் தொலைந்து போன சாவிகளை கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். மதத்தை வைத்துப் பிரச்சாரம் செய்யும் மோடியின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்றும் ஒடிசா மக்கள் அறிவாற்றல் உடையவர்கள் என்றும் வி.கே.பாண்டியன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கோவிலின் புதையல் அறை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக மூடப்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்டார். கடந்த 2018ம் ஆண்டு ஒடிசா உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அந்த அறையை ஆய்வு செய்த போதுதான் சாவிகள் காணாமல் போனது தெரியவந்தது என்றும் அசல் சாவிகள் தொகுப்பு இல்லை என்றாலும் நகல் சாவிகள் இருப்பதால் மாநில நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்படும் தேதியில் புதையல் அறையின் கதவைத் திறக்கலாமென ஓடிசா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர்,”அரசியல் பிரசாரத்தில் ஜெகநாதர் கோயிலைப் பற்றிப் பிரதமர் மோடி பேசியதால் அவர் (நவீன் பட்நாயக்) மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். இது நியாயமில்லை. பிரசாரத்தில் ஜெகநாதர் பற்றிப் பேசியதை ஒடிசா மக்கள் இதை விரும்பவில்லை.நாங்கள் சிறப்பான பணிகளைச் செய்துள்ளோம். விலைவாசியை குறைத்துள்ளோம். சிறந்த உட்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கியுள்ளோம். இதைவெல்லாம் வாக்கு மாறும் என்பதால் அவநம்பிக்கையாக இதுபற்றிப் பேசுகின்றனர்,”இவ்வாறு குறிப்பிட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *