சென்னை: மத்திய அரசு தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியும், மாநில அரசுக்கு அதிகாரமில்லையெனக் கூறுவது பொய், தமிழக அரசின் நாடகம்” எனப் பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தித் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசுதான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியும் என முதல்வர் கூறுவது சரியல்ல. மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான், உள் ஒதுக்கீடு வழங்க முடியும் எனக் கூறுவது பொய். இது தமிழக அரசு நடத்தும் நாடகம்.
Caste Census மத்திய அரசு எடுப்பது, Caste Survey மாநில அரசு எடுப்பது. அந்த அதிகாரத்தை வைத்துத் தான் பீஹாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ தடை செய்யவில்லை. அதேபோல், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்கள் கணக்கெடுப்பு எடுத்து வருகின்றனர். கர்நாடகா அரசு எடுத்து முடித்துள்ளது. அப்படியிருக்கையில், தமிழக அரசுக்கு எது தடையாக உள்ளது?
விவாதிக்க தயார்
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பொய் பேசுகிறார். 2008 புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் சட்டப்படி ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வை மேற்கொள்ள மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. பஞ்சாயத்து தலைவருக்குக் கூட ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் உண்டு. கணக்கெடுப்பு நடத்த மனசில்லையெனச் சொல்லிவிட்டு போங்கள். இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கருடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார். இவ்வாறு அவர் கூறினார்.
