
ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகலில் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் இன்று இரவு அல்லது நாளைக் காலைக்குள் மரக்காணம்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், புயல் கரையை நெருங்கத் தாமதமாக, தாமதமாகச் சென்னை, மற்றும் அண்டை மாவட்டங்களில் மழை அதிகரிக்கும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் நாளைக் காலை வரை கனமழை பெய்யும். புயல் கரையைக் கடக்கும் வரை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும். கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 70 கி.மீ. வேகத்தில் மாலை அல்லது இரவு முதல் வீசும் எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து 140 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. நள்ளிரவில் 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த புயல் தற்போது 12 கி.மீ’ வேகத்தில் நகர்ந்து வருகிறது.




