
தென்காசியில் நடைபெற்று வந்த பொதிகை புத்தகக் கண்காட்சியில் ஒரு கோடியே 3 லட்ச ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் விற்பனையானதாக மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தகவல் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் பொதிகை புத்தக திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இந்தப் புத்தக திருவிழாவில், கலை, இலக்கியம், வரலாற்று படைப்புகள், போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் என சுமார் 1 லட்சம் புத்தகங்கள் காட்சிப் படுத்தபட்டிருந்தது.
நாள் தோறும் ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டுப் புத்தகங்களை வாங்கி சென்றனர். விழாவில் அதிக புத்தகங்கள் வாங்கி முதலிடம் பிடித்த ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப் பள்ளிக்கு முதல் பரிசு 25 ஆயிரமும் ரூபாயும், 2-ஆம் இடம் பிடித்த வீரசிகாமணி விவேகானந்தா சில்வர் ஜுப்ளி பள்ளிக்கு 2-வது பரிசு 20 ஆயிரம் ரூபாய்யும், 3-ஆம் இடம் பிடித்த சங்கரன்கோவில் ஸ்ரீ வையாபுரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு 15 ஆயிரமும் ரூபாயும் சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் தலைமையில் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் இந்த ஆண்டு நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளதாகத் தெரிவித்தார்.



