
திமுகவை எதிர்க்கும் கட்சிகளையும், தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும் கட்சிகளையும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரவேற்பதாகப் பாஜக மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் பாஜக சார்பில் சக்தி கேந்திரப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவியும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். படுகர் இன மக்களின் பாரம்பரிய உடையை அணிந்த கட்சியினர் அவருக்கு வரவேற்பளித்தனர்.
அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் நடைபெறும் ஒரே வேலை இலஞ்சமும் ஊழலும் தான் என்றார். பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாகத் தமிழகம் மாறியுள்ளதாகவும், ஒவவொரு நாளும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துத் தமிழகம் அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் வானதி சீனிவாசன் கூறினார்.



