
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், ரப்பர் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக தொடர் மழை பெய்து வருவதால், சர்வதேச சுற்றுலா தளமான கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது, மழையின் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல், வீட்டிலேயே முடங்கியுள்ள நிலை ஏறபட்டுள்ளது.
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரதான தொழிலாக உள்ள ரப்பர் மரங்களில் பால்வெட்டும் தொழில் மழையின் காரணமாக பாதிப்படைந்துள்ளது, கீரிப்பாறை, வாழையத்துவயல், மாறாமலை,காளிகேசம், கரும்பாறை, சுருளோடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ரப்பர் மரங்களில், வைக்கப்பட்ட சிரட்டைகளில், மழை நீர் நிரம்பியுள்ளதால், தொழில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது, கடற்கரை பகுதியில் சூறைக்காற்று வீசுவதால், அவ்வப்போது, கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
மேலும் தொடர் கனமழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.




