
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, இரண்டு நாட்கள் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில், த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 50 சதவீதத்திற்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள், புதுமுகங்கள் என்பதால், சட்டசபை நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வரும் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
இது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 17-வது சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு வரும் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது என்றும், சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள 3-வது தளத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் இந்த புத்தாக்க பயிற்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளேன் எனவும், இந்த புத்தாக்க பயிற்சியை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார்.
சட்டமன்றத்தில் அவை மரபுகள் குறித்து எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், என பயிற்சி அளிக்கப்படும் என்றும், சட்டசபை நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் எனவும், ராஜினாமா செய்த 4 சட்டமன்ற உறுப்பினர்களின் புகார் கடிதங்களையும் இணைத்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்..




