
தேசிய குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட பல்வேறு விவகாரங்களில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் கொள்ளுப்பேரன் பாஜகவிலிருந்து விலகியுள்ளார்…
கொல்கத்தா: இந்தியா சுதந்திரம் அடைய பெரும் பங்காற்றிய விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய பெருமையும் நேதாஜியையே சேரும்.
இதனிடையே, நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் கொள்ளுப்பேரன் சந்திரகுமார் போஸ். இவர் 2016ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். அவருக்கு மேற்குவங்காள பாஜக துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது.
அதேவேளை, 2019ம் ஆண்டு தேசிய குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட பல்வேறு விவகாரங்களில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டைச் சந்திரகுமார் போஸ் எடுத்தார். இதனைத் தொடர்ந்து, 2020ம் ஆண்டு பாஜக துணைத்தலைவர் பதவியிலிருந்து சந்திரகுமார் போஸ் நீக்கப்பட்டார். ஆனாலும், அவர் பாஜகவில் தொடர்ந்து நீடித்து வந்தார்.
இந்நிலையில், சந்திரகுமார் போஸ் பாஜகவிலிருந்து இன்று விலகியுள்ளார். தன் ராஜினாமா கடிதத்தைப் பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். நேதாஜியின் கொள்கைகளைப் பரவுவதில் பாஜக மத்திய தலைமையும், மாநில தலைமையும் ஆதரவு தராததால் கட்சியிலிருந்து விலகுவதாகச் சந்திரகுமார் போஸ் தெரிவித்துள்ளார்.


