Karnataka govt:நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றம்!

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேசிய அளவில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என டெல்லி, ஹிமாச்சல், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலுங்கானா, மேற்கு வங்கம் ஆகிய 8 மாநில முதல்வர்களுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.

இதனையடுத்து, தமிழ்நாட்டைத் தொடர்ந்து நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி, நேற்று மேற்குவங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராகக் கர்நாடக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை மருத்துவக் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரண் பிரகாஷ் பாட்டீல் தாக்கல் செய்தார்.

பொது நுழைவுத் தேர்வு (CET) என்ற மாற்றுத்தேர்வு முறையின் அடிப்படையில் கர்நாடகாவில் மருத்துவ சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *