
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தேமுதிக சார்பில் அந்தியூர் பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த வாரம் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என தொண்டர்கள் பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்து பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றிய தேமுதிக செயலாளர் சுதாகர் தலைமையில் நூற்றாண்டுகள் பழமையான புகழ்பெற்ற அந்தியூர் பத்திரகாளியம்மனுக்கு பால், தேன், பன்னீர், இளநீர், தயிர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது,பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு கேப்டன் விஜயகாந்தின் பெயருக்கு அர்ச்சனை செய்யப்பட்டது.
தொடர்ந்து அந்தியூர் ஒன்றிய செயலாளர் சுதாகர் தலைமையில் கோவிலுக்கு வந்திருந்த பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

