
கொடைக்கானல்: லோக்சபா தேர்தலில் பிரசாரத்திற்காகச் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானலில் ஏப். 29 முதல் மே 4 வரை ஓய்வு எடுக்க உள்ளார். மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த இதற்கான முன்னேற்பாடுகள் இதை உறுதிப்படுத்தி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் மாலத்தீவுக்கு சென்று குடும்பத்துடன் ஓய்வு எடுப்பதாகத் தகவல் வெளியான நிலையில் கொடைக்கானல் வர உள்ளார். ஏப்.29ல் இங்குவரும் நிலையில் தனியார் விடுதியில் குடும்பத்துடன் மே 4 வரை தங்கி ஓய்வெடுக்க உள்ளார்.
முதல்வர் செல்லும் இடங்கள், ரோடுகள் குறித்து திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். இன்று கலெக்டர் பூங்கொடி கொடைக்கானலில் ஆய்வு செய்ய உள்ளார்.
2021ல் சட்டசபை தேர்தல் முடிந்த பின் ஓய்வுக்காகக் குடும்பத்துடன் முதல்வர் பாம்பார்புரம் தனியார் விடுதியில் ஒரு வாரம் தங்கினார். தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வரானார். தற்போது லோக்சபா தேர்தல் முடிவுற்ற நிலையில் அதிலும் வெற்றி பெற வேண்டும் என்று சென்டிமென்டாகக் கொடைக்கானலில் தங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில்’ முதல்வர் வருகைகுறித்து உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அனைத்து துறையினரும் செய்து வருகிறோம். போலீசாருக்கும் பாதுகாப்பு பணிகுறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றனர்.
ஓய்வெடுக்கும்அண்ணாமலை
லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் முதல் இங்குப் பாம்பார்புரம் பகுதி தனியார் விடுதியில் குடும்பத்தினருடன் தங்கி ஓய்வில் உள்ளார். தி.மு.க. அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கொடைக்கானலில் முகாமிட்டுள்ளனர்.

