
சிங்கப்பூரில் 3ஆவது முறையாகத் தமிழ் இளைஞர் விழா நடைபெறவுள்ளது.இந்த விழா வரும் செப்டம்பர் 2ம் தேதி முதல் 10ம் தேதிவரை நடைபெறுகிறது…
சிங்கப்பூரில் ஆட்சி மொழியாகத் தமிழும் உள்ளது என்பதை போற்றும் வகையில், வளர் தமிழ் இயக்கத்தினர் தமிழ் மொழியை ஊக்குவிக்கப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும், இவ்வியக்கத்தின் சார்பில் 3ஆவது முறையாகத் தமிழ் இளைஞர் விழா நடைபெறவுள்ளது.
இந்த விழா வரும் செப்டம்பர் 2ம் தேதி முதல் 10ம் தேதிவரை நடைபெறுகிறது. தமிழ்மொழியின் கலாசாரம், பெருமை, வளர்ச்சி ஆகியவற்றை இளைஞர்களிடையே கொண்டு சேர்த்து ஊக்குவித்துக் கொண்டாட வேண்டும் என்பதே வளர் தமிழ் இயக்கத்தின் நோக்கம்.இந்த ஆண்டு நடைபெற உள்ள இவ்விழாவில், 10 கூட்டு அமைப்புகள் 10விதமான நிகழ்ச்சிகளை வழிநடத்தவுள்ளன.
மேலும், இந்த ஆண்டின் கருப்பொருளாக “அழகு” என்ற சொல் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் மொழியின் எழில், செழுமை, பெருமை போன்றவற்றை நிகழ்ச்சிகளின் மூலம் எடுத்துக்கூற வேண்டும் என்று வளர் தமிழ் இயக்கம் விரும்புகிறது.
மாணவர்கள், இளைஞர்கள் என 35 வயதுக்கும் கீழ் உள்ளவர்களுக்காகப் பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.
இந்த விழாவில், தமிழின் பாரம்பரியப் படைப்புகள் முதல் நவீனக் கலைகள்வரை கண்டு ரசிக்கலாம். தமிழ் கலாசாரம், இலக்கியம் சார்ந்த படைப்புகள், மொழி அடிப்படையிலான பயிலரங்குகள், போட்டிகள் எனப் பலவற்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

