
கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக சித்தராமையா அறிவித்துள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று காலை தனது அதிகாரபூர்வ இல்லத்தில் துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் சிவகுமார், சித்தராமையாவின் கால்களை தொட்டு ஆசிர்வாதம் வாங்கிய புகைப்படம் வைரலாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். பதவியைத் துறப்பதற்குத் தனக்கு மனதிற்குள் எந்தவித வருத்தமும் இல்லை என்று கூறினார். இத்தனை காலம் தனக்கு முழு ஒத்துழைப்பு நல்கிய அமைச்சரவை சகாக்கள், காங்கிரஸ் மேலிடம் மற்றும் மாநில மக்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தார்.
இன்று பிற்பகல் 3 மணியளவில் மாநில ஆளுநரைச் சந்திக்க அனுமதி பெற்றுள்ளதாகவும், அந்தச் சந்திப்பின் போது தனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சித்தராமையாவின் இந்த திடீர் ராஜினாமா அறிவிப்பு கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



