Advertisements

ஒரத்தநாடு அருகே பூட்டிய காருக்குள் சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் வடக்கு நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். இவரது மகன் தமன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறான். தமன் தனது பெரியப்பா மகன் பிரவீன்குமாருடன் காரில் சென்றுள்ளார். அப்போது, காலை 10 மணி அளவில் அதே பகுதியில் காரை பிரவீன்குமார் பூட்டிய நிலையில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் காருக்குள் இருந்த சிறுவன் தமன், அதில் இருந்து வெளியேற முடியாமல் அங்கேயே மூச்சு முட்டி இறந்துள்ளான். இது அறியாமல் சிறுவனின் உறவினர்கள் பெற்றோர்கள் ஊர் முழுவதும் தேடிக் கொண்டிருந்தனர். இதன் பின்னர், மாலை 7 மணி அளவில் காரை உறவினர்கள் சோதித்தப்போது, சிறுவன் தமன், இறந்த நிலையில் கிடந்ததை கண்டு கதறி அழுதனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தமனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பூட்டிய காருக்குள் சிறுவன் மூச்சு திணறி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..
Advertisements



