Advertisements

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை முதலமைச்சர் விஜய் அடையாளம் கண்டு, பெயரை கூறிவிட்டால் அரசியலில் இருந்தே தான் விலகி விடுகிறேன் என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் ஆர்.பி. உதயகுமார் சவால் விடுத்துள்ளார்.
மதுரையில் அதிமுக சார்பில் நடைபெற்ற தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, பேசிய அவர் விளம்பர வெளிச்சத்தில் திமுக ஆட்சி நடத்துவதாக நாங்கள் நாகரிகமாக விமர்சித்ததாகத் தெரிவித்தார்.
ஆனால், தற்போதைய முதலமைச்சர் விஜய், ‘நான் 5 நிமிடம் கொளத்தூரில் பேசியதற்கே மு.க.ஸ்டாலின் கொத்து பரோட்டா ஆகிவிட்டார்’ என்கிறார். இது எவ்வளவு நாகரிகமான பேச்சு என்று கேள்வி எழுப்பினர். ஓடு..ஓடு..ஓடு என விமர்சிக்கிறார், யார் கரூரில் ஓடினார், கரூரை யார் சுடுகாடு ஆக்கினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும் என்று கூறினார்.
மத்திய அரசு வருமான வரி கட்டவில்லை என அவருக்குக் களவாணி பட்டம் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார். ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களை திருடுவதற்கு நாங்கள்தான் களவாணி எனக்கூறவேண்டும் என்று விமர்சித்தார். மேலும், விசில் சின்னத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் முகத்தைப் பார்த்து, சரியாக அவர்களின் பெயரை முதலமைச்சர் உச்சரித்து விட்டால், இந்த உதயகுமார் பொதுவாழ்க்கையில் இருந்தே விலகுவதாக சவால் விடுத்துள்ளார்.
Advertisements




