
மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள நீர்த்தேக்கத்தில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்ததற்கு நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியப் பிரதேசத்தின் பர்கி அணை நீர்த்தேக்கத்தில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததால் 9 பேர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் இந்திய பாதுகாப்புத் துறை வெடிமருந்து தொழிற்சாலையில் பணியாற்றி வந்த திருச்சி நவல்பட்டு காமராஜ், அவர் மனைவி கார்குழலி, மகன் தமிழ்வேந்தன், உறவினர்கள் மயூரன், சவுபாக்கியவதி ஆகிய ஐந்து பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது துயரத்தை மேலும் அதிகரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நீரில் மூழ்கியபோதும் 4 வயது மகனை அணைத்தபடி மரணித்துள்ள தாயின் புகைப்படம் நெஞ்சை உலுக்குவதாகத் தெரிவித்துள்ளார்.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
இந்திய துணைக்கண்டம் முழுதும் கோடைக்காலம் மற்றும் பள்ளி விடுமுறைக் காலம் என்பதால் சுற்றுலாத்தலங்களில் மக்களின் கூட்டம் பன்மடங்கு அதிகரிக்கும் நிலையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.



