
மருத்துவத்துறையைத் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு வாக்குச் செலுத்தி, ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தவெக அரசை கண்டித்து கண்டன பதிவிட்டுள்ளார். அதில், புதிதாக 8 ஆயிரம் மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனும் தவெக அரசின் அறிவுப்பு அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார். மருத்துவத்துறையில் கண்மூடித்தனமாகத் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு வாக்குச் செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகம் என்று குற்றம் சாட்டினார். தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்கு மருத்துவத்துறையை தாரைவார்த்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார். இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டிருப்பது மருத்துவத்துறையில் சீர்கேடுகள் பெருகவே வழிவகுக்கும் என்று கூறினார். மருத்துவத்துறையை தனியார்மயமாக்கும் செயலை கைவிட்டு, தரமான மருத்துவ சிகிச்சைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை வலியுறுத்தினார்.



