
வங்கக் கடல் பகுதியில், மீன் பிடிக்க விதிக்கப்பட்ட 61 நாள்கள் தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது.
மீன்கள் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு, வங்கக் கடலில் ஆண்டுதோறும் ஏப்.15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு மீன்பிடிக்க தடைக்காலம் அமல்படுத்தப்படும். அதன்படி, தடைக்காலம் கடந்த ஏப்.15-ஆம் தேதி தொடங்கியது.
இந்தத் தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதையொட்டி, தமிழகம் முழுவதும் மீனவா்கள் உற்சாகத்துடன் கடலுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனா்.
சென்னை காசிமேடு துறைமுகத்தில் மட்டும் சுமாா் 800 விசைப்படகுகள் உள்ளன. தடைக்காலத்தையொட்டி விசைப்படகுகளை பழுது நீக்கி புதுப்பிக்கும் பணிகள் கடந்த இரு மாதங்களாக நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், கடலுக்குச் செல்லும் விசைப்படகுகளில் ஐஸ்கட்டிகள், டீசல் நிரப்பும் பணி உள்ளிட்டவை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.




