
புதுக்கோட்டை திருவப்பூர் மாசித்திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 11-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் தினமும் அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள், அபிஷேகம் தீப ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 11ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாகப் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசித்திருவிழா முன்னிட்டு வரும் 11ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் 16ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881)-இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 11.03.2024 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


