
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி தண்டனை பெற்ற காரணத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி காலத்தில் கடந்த 2006 – 2011ஆம் ஆண்டில் உயர்கல்வித் துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் பொன்முடியை விடுவித்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல் முறையீடு செய்தனர்.
இந்த வழக்கில் பொன்முடிக்கு விடுதலையை ரத்து செய்த உயர்நீதிமன்றம் பொன்முடிக்கான தண்டனையை அறிவித்தது. அதன் படி சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியென அறிவிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு காரணமாகப் பொன்முடி அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கான பதவியை இழந்தார். இதனை எதிர்த்துப் பொன்முடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனால், திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டவில்லை. இந்தத் தொகுதியைக் காலியானதாக அறிவிக்க வேண்டும் என அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில் தான் திருக்கோவிலூர் சட்டப்பேரவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகத் தமிழக சட்டசபை செயலகத்திலிருந்து தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆகையால், நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படும்போது திருக்கோவிலூர் மற்றும் விளாத்திகுளம் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாமெனக் கூறப்படுகிறது.


