
டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. கடந்த 8-ந்தேதி தேர்தல் முடிவுகள் வெளியானாலும், நேற்று இரவுதான் பாஜக முதல்வரை அறிவித்தது. ரேகா குப்தா என்ற பெண் எம்.எல்.ஏ. முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று மதியம் 12 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் அவர் தனது பதவியை ஏற்க உள்ளார்.
இவர் முதன்முறையாக எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஷாலிமார் பார்க் தொகுதியில், ஆம் ஆத்மி வேட்பாளர் பந்த்னா குமாரியை 29 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.
எனினும், இது இவருக்கு முதல் தேர்தல் அல்ல. 2015 மற்றும் 2020-ல் இதே தொகுதியில் பந்த்னா குமாரியிடம் தோல்வியடைந்துள்ளார். தற்போது 3-வது முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டு, வெற்றி பெற்று முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ரேகா குப்தாவின் வாழ்க்கை பின்னணி. டெல்லி மாநகராட்சியின் பெண்கள் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கமிட்டியின் தலைவராக 2007 முதல் 2009 வரை பணியாற்றியுள்ளார். பாஜக-வின் டெல்லி பெண்கள் பிரிவின் பொதுச் செயலாளர் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் அவர் செயல்பட்டுள்ளார்.
