V. Senthil Balaji Case: நீதிமன்ற காவல் 21-வது முறையாக நீட்டிப்பு!

Advertisements

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 20-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கச் சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டக் கொண்டே வருகிறது. அதன்படி, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலமாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வருகிற 20ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 21ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணையின்போது, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவிகுறித்து நீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியது. எனவே, ஜாமீன் கிடைக்க அமைச்சர் பதவி இடையூறாக இருக்கக் கூடாது என்பதால், செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்த விசாரணை முடிந்து, கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. பின்னர் செந்தில் பாலாஜி நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு தொடர்ச்சியாகச் செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.செந்தில் பாலாஜி ஜாமீன்

மனுமீது நேற்றும் நேற்று முன் தினமும் நடந்த விசாரணையின்போது, செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்கத்துறை வழக்கறிஞர் சுந்தரேசன் ஆகியோர் தங்களது வாதத்தை நிறைவு செய்துள்ளனர். இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் பதில் வாதம் செய்ய வழக்கின் விசாரணை வருகிற 21ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *