
விற்பனைக்கு வரும் கோழிகளுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பு தீவனம் வழங்கப்படுவதால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடு மற்றும் தொழில் இழப்பை எதிர்த்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை (வெள்ளிக்கிழமை) கோழிக் கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நாளை கடைகள் வழக்கம்போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோழி இறைச்சி அதிகம் விற்பனை செய்யப்படும் சென்னையிலும் கடைகளை மூடினால் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்பதால், சென்னை கோழி மொத்த வியாபாரிகள் சங்கம் கடைகள் மூடப்படாது என்று அறிவித்துள்ளது.
சென்னையில் 8,000 கோழி கடைகள் இயங்கி வருவதுடன், தினசரி 600 டன் (6 லட்சம் கிலோ) கோழிக்கறி விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் ஞானம் கூறுகையில், “கோழிக்கடைகளை ஒருநாள் அடைத்தால் பொதுமக்களும், ஓட்டல்களும், சில்லறை விற்பனையாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். பண்ணையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதால், சென்னையில் நாளை கோழிக்கடைகள் வழக்கம் போல் செயல்படும்” என்றார்.
இதனைத் தொடர்ந்து, சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் உள்ள சிறு ஓட்டல்கள் முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை கோழி இறைச்சியின் தேவைக் கருதி நாளையும் கோழிக்கடைகள் வழக்கம்போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




